மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலம், இந்த சுற்றுப் பயணத்தின் பொழுது நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்று, இந்திய அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 140 ஓவரில் 416 ரன்கள் குவித்தது. ஹனுமா விஹாரி சதமடித்து அசத்தினார்.
பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை ஆட ஆரம்பித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹெட்மயிர் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆட ஆரம்பித்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்த பொழுது, டிக்ளேர் செய்தது.
458 ரன்களை குவிக்க வேண்டும் என்ற கடினமான இலக்கினை, மேற்கு இந்தியத் தீவுகள் அணி எதிர் கொண்டது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சினைத் தாக்குப் பிடிக்க முடியாமல், மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி, 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கோப்பையை வென்றது.