இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக, பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் 2020 சீசன் 13ன் போட்டிகள் அனைத்தும், கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கானது தற்பொழுது வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்தப் போட்டிகளை எப்பொழுது நடத்துவது என்பது குறித்து, பிசிசிஐ நிர்வாகத்தினரும், ஐபிஎல் நிர்வாகத்தினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்பொழுது நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்த, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன் வந்தன. இருப்பினும், பாதுகாப்பு, வீரர்களுக்கான வசதிகள், மைதானம், ரசிகர்களின் வசதி உள்ளிட்டவைகளைக் கருத்தில் கொண்டு ஒரு மனதாக நேற்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதியினை, பிசிசிஐ நிர்வாகம் இந்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்திய அரசு வழங்கும் பட்சத்தில், வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி அன்று, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என்றுக் கூறப்படுகின்றது.