வீரர்கள் நடுவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்! ஐசிசி அறிவிப்பு!

25 May 2020 விளையாட்டு
iccworldt20.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், உலகளவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனால், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்து, மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் பொழுது, வீரர்களும், நடுவர்களும் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஐசிசி.

அதன்படி, இனி வீரர்கள் தங்களுடைய மேலாடையைக் கழற்றி நடுவரிடமோ, மற்ற வீரர்களிடமோ தரக் கூடாது. பயிற்சியின் பொழுது, சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து கொள்ளலாம். பந்தினை, ஒரு வீரரின் கையில் வாங்கி, மற்றொருவரிடம் தர வேண்டிய நிர்பந்தம் உள்ளதால், கையுறைகளை நடுவர்கள் பயன்படுத்தலாம்.

தன்னுடைய வாட்டர்பாட்டில், குளிர்பானம், உணவு, உடை முதலியவற்றை சக வீரருடன் பகிரக் கூடாது. ஒவ்வொரு அணியும், சுகாதாரத் துறை அதிகாரியினை பயன்படுத்த வேண்டும். விளையாடும் பொழுது, அடிக்கடி சானிட்டைசர்களைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சியின் பொழுதும், போட்டிகளுக்கு முன்பும் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருக்கின்றதா எனப் பார்க்க வேண்டும். இல்லை என்றால், போட்டிகளுக்கு முன்பாக, 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டது என்ற தகவல் உறுதியானப் பின்னரே, போட்டிகளை நடத்த வேண்டும் எனவும், வீரர்கள், பார்வையாளர்களின் நலனே முக்கியம் எனவும் ஐசிசி கூறியுள்ளது.

HOT NEWS