கொடூரமான பேய்கள் பயன்படுத்திய பஸ்375 பற்றித் தெரியுமா?

11 April 2020 கதைகள்
bus375.jpg

நம் அனைவருக்கும் பேய் கதை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், உண்மையில் யாருக்கும் பேயினைப் பார்க்கும் தைரியம் கிடையாது. அந்த அளவிற்கு, நம் அனைவருக்குள்ளும் பயம் என்பது உண்டு. அப்படி நமக்குள் இருக்கும் பயத்துடன் விளையாடக் கூடிய உண்மையாக நடந்த சம்பவத்தினைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த சம்பவமானது, 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று நடைபெற்றுள்ளதாக, போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்தக் காலக் கட்டத்தில், மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பீஜிங் மாகாணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து ப்ராகரண்ட் ஹில்ஸ் எனப்படும் ஷியாங்-சான் (XIANG-SHAN) என்ற இடத்திற்கு, யுயான்-மிங்-யுயான் பேருந்து நிலைய பேருந்தானது கிளம்பியது. இது தான், அந்த ஷியாங்-சான் பகுதிக்குச் செல்கின்ற கடைசி பேருந்து ஆகும். இதன் பின்னர், மறுநாள் காலையில் தான் அடுத்தப் பேருந்துப் புறப்படும். இந்தப் பேருந்தினை விட்டால், வேறு பேருந்தில்லை.

இதனால் அந்தப் பேருந்திற்காக காத்திருந்த நான்கு பேர், அந்தப் பேருந்தில் ஏறினர். ஒரு இளம் ஜோடி, ஒரு இளைஞர் மற்றும் ஒரு வயதான மூதாட்டி ஆகியோர் இந்தப் பேருந்தில் ஏறியுள்ளனர். அந்தப் பேருந்தில், ஓட்டுநரும், பெண் கண்டக்டரும் இருந்துள்ளனர். அந்த இளம் ஜோடியானது, டிரைவருக்குப் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டனர். கதவு அருகில் உள்ள சீட்டில், மூதாட்டியும், அந்த இளைஞரும் அமர்ந்து கொண்டனர்.

பேருந்தும் கிளம்பியது. வேகமாகப் போய் கொண்டிருந்த பேருந்தினை மூன்று பேர் கையைக் காட்டி நிறுத்தினர். அவர்களைப் பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் நிறுத்தினார். அந்த மூன்று பேரும், சீனர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கீழே சாய்ந்தபடி, இருந்துள்ளார். அவரை, மற்ற இரண்டு பேரும் கைத் தாங்கலாக அழைத்து வந்துள்ளனர்.

அவர்கள் மூவரும், பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளனர். பின்னர், பேருந்தும் போய் கொண்டே இருந்துள்ளது. இரவு நேரம் மட்டுமல்லாமல், சீனாவில் இரவு நேரத்தில் பனிக் காற்று வீசுவது வழக்கம். அன்றைக்கும் பனிக்காற்று வீசியுள்ளது. இதனால், அந்த மூதாட்டி அலறியுள்ளார். பேருந்து நிறுத்தப்பட்டது. என்ன என்றுக் கேட்டதற்கு, இந்த இளைஞன் என் பர்ஸைத் திருடிவிட்டான். உடனடியாக, பேருந்தினை போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால், அந்த இளைஞனோ, நான் திருடவில்லை இந்தப் பாட்டி பொய் சொல்கின்றார் எனக் கூறியுள்ளார். ஆனாலும், அந்தப் பாட்டி விடவில்லை. தொடர்ந்து, திருட்டுப் பழி சுமத்திய அந்தப் பாட்டி, உடனடியாக வண்டியினை நிறுத்தி கீழே அந்த இளைஞருடன் இறங்கியுள்ளார். நான் இந்த இளைஞனை போலீஸ் ஸ்டேசனுக்கு, அழைத்துச் செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.

இதனை கேட்ட ஓட்டுநர், அவர்களை இறக்கி விட்டுவிட்டு பேருந்தினை ஓட்ட ஆரம்பித்தார். அந்தப் பாட்டியும், இளைஞரும் சாலையின் ஓரமாக நின்றனர். அப்பொழுது, அந்தப் பாட்டி பேருந்தில் அமர்ந்திருந்த மூன்று பேரையும் பார்த்துள்ளார். அவர்கள் இந்தப் பாட்டியினை பேருந்திற்குள் இருந்து கொண்டே, கண்ணாடி வழியாகத் திரும்பிப் பார்த்துள்ளனர். அப்பொழுது, மீண்டும் அந்த இளைஞரைப் பாட்டித் திருட்டுப் பயலே எனத் திட்டியுள்ளார்.

அந்தப் பேருந்தும் வேகமாகச் சென்று, இரவில் வீசிய பனியில் மறைந்தது. அப்பொழுது, அந்த இளைஞர் ஏன் பாட்டி பொய் சொல்றீங்க எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பாட்டி, தம்பி, என்னை மன்னிச்சிடு. நான் உன் உயிரைக் காப்பாற்றத் தான் அப்படி செஞ்சேன் எனக் கூறினார். என்ன சொல்றீங்கப் பாட்டி என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பாட்டி, தம்பி நம்ம இருந்த வண்டில ஏறிய அந்த மூன்று பேரின் கால்களை நான் கவனித்தேன். அதில் இரண்டு பேருக்குக் கால் இல்லை. அவர்கள் பேய் தம்பி, அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றத் தான், அவ்வாறு செய்தேன் என்றுக் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்களுடைய ஊருக்கு நடந்தே சென்றுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த நாள் அந்த பேருந்து தன்னுடைய நிலையத்திற்கு வரவில்லை என்றப் புகாரானது, போலீசில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விஷயம் டிவிக்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இதனைப் பார்த்த அந்தப் பாட்டியும், இளைஞரும் தாமாக முன்வந்து பீஜிங் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்துள்ளனர். அப்பொழுது, நடந்த உண்மையினைக் கூறியிருக்கின்றனர். இதைக் கவனித்த போலீசார், எப்படியும் அவர்கள் இறங்கிய இடத்திற்கு அருகில் தான் அந்தப் பேருந்து இருக்க வேண்டும் என யோசித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தினை அவர்கள் இறங்கியப் பகுதியின் அருகில் தேடியுள்ளனர்.

அருகில் இருந்த குளத்தில், அந்தப் பேருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தினைப் போலீசார் மீட்டுள்ளனர். அதில், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அந்த பேய்களால் அழைத்து வரப்பட்ட மூன்றாவது நபரின் பிணங்கள் மட்டுமே இருந்துள்ளன. அந்த வண்டி எப்படி இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது என, வண்டியின் டீசல் டேங்கினைத் திறந்து பார்த்துள்ளனர்.

அதில், டீசலுக்குப் பதில் ரத்தமே இருந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்பொழுது வரை, பீஜிங் போலீசாரால் இந்த வழக்கானது கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே உள்ளது.

HOT NEWS