தமிழகத்தில் இன்று (24-03-2020) மாலை ஆறு மணி முதல், மார்ச் மாதம் 31ம் தேதி வரை, 144 தடை உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துக் கடைகள், பால் விற்பனை, வங்கிகள், ஏடிஎம்கள் உட்பட சில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணமாக நிவாரணத் தொகையினை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும், 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை முதலியவை விலையின்றி வழங்கப்பட உள்ளது.
அம்மா உணவகங்களில் சுவையான, சுகாதாரமான, சுத்தமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்பொழுது, முதற்கட்டமாக 60 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட்டது. மேலும், கூடுதலாக 500 கோடி ரூபாயனது ஒதுக்கப்பட்டு உள்ளது.