ஊரடங்கின் காரணமாக, 12ம் வகுப்பின் இறுதித் தேர்வினை பல மாணவர்களால் எழுத முடியாத காரணத்தால், அவர்களுக்காக புதிய தேர்வானது ஜூலை 27ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளன.
இது குறித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 19-20ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்புப் பொதுத்தேர்வானது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. மார்ச் 24ம் தேதி அன்று, நடைபெற்ற பொதுத் தேர்வினை பல மாணவர்கள் எழுதி முடிக்க இயலாத சூழ்நிலை உருவானது. இது குறித்து பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை முதலமைச்சர் அவர்கள் கணிவுடன் பரிசீலித்து, தற்பொழுது புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அதன்படி, 24ம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வினை, மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அந்த மாணவர்கள் தங்களுடையத் தேர்விற்கான ஹால்டிக்கெட்டுகளை, http://dge.tn.gov.in என்ற வலைதளத்தில் வருகின்ற 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், தனித்தேர்வர்கள் தங்களுடையத் தேர்வு மையங்களுக்குச் சென்று, பெற்றுக் கொள்ளலாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
மாணவர்கள் தேர்விற்கு செல்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்யப்படும் எனவும், நோய்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு கிடையாது எனவும், ஒருவேளை மாணவர்கள் அப்பகுதிகளில் தேர்வு எழுத வேண்டி இருந்தால், அவர்கள் தேர்வு மையங்களின் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், கோவிட்19 கட்டுப்பாட்டுத் தொடர்பான வழிமுறைகள், இந்தத் தேர்வில் பின்பற்றப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.