இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து, வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸானது, இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் கடுமையாக எடுத்து வருகின்றன. இந்நிலையில், மாநில அரசுகள் முழுமையான லாக்டவுன் எனப்படும், வீடுகளிலேயே அனைவரையும் இருக்கக் கூறும் முறையினை முழுமையாக மக்கள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், அதனை மாநில அரசு கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என, பிரதமர் மோடி இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான நீண்ட நேர ஆட்சியர்கள் கூட்டத்திற்குப் பிறகு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மார்ச் 24ம் தேதி மாலை ஆறு மணி முதல் மார்ச் 31ம் தேதி மாலை ஆறு மணி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட உள்ளன.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட உள்ளன. இதனால், காய்கறிகள், பால் கடைகள் ஆகியவைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. பணிக்கு இந்தக் காலக் கட்டத்தில் வர இயலாத ஊழியர்களின் சம்பளத்தினைப் பிடிக்கக் கூடாது என, தனியார் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.
உரிமம் இல்லாத தண்ணீர் விற்கும் நிறுவனங்களுக்கு, தற்காலிக அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. விற்பனையில், 15 சதவிகிதத்தினை அரசிற்கு வழங்கவும் கட்டளையிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கும் அதிகமாக நடமாடக் கூடாது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மற்றும் மருந்து விற்கும் கடைகளுக்கு, இந்த தடை கிடையாது. காய்கறி கடைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும். வணிக வளாகங்கள், மார்க்கெட், திரையறங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.