எஸ் பேங்க்கில் கடந்த காலாண்டில் மட்டும், 18,564 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றது, எஸ் பேங்க். இதன் நிறுவனர் ரானா கபூரினை, இந்திய அமலாக்கத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் 2000 கோடி ரூபாய்க்கும் மேல், முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தகுதியில்லாத நிறுவனங்களுக்கு, அவர் கமிஷன் அடிப்படையில் கடன் வழங்கி இருப்பதும், அவைகள் வாராக் கடன்களாக இருப்பதும் அமலாக்கத்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, எஸ் பேங்கில் இருந்து, 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க, ஆர்பிஐ அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கியது. மேலும், எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்பிஐ தலைமையில், ஒரு குழுவினையும் அது நியமித்தது. அதன் கீழ் தான், தற்பொழுது எஸ் பேங்க் இயங்கி வருகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்னர் 1000 கோடி ரூபாய் அளவிற்கு, எஸ் பேங்க் லாபம் அடைந்ததாகவும், கடந்த ஆண்டு 629 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்ததாகவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதே போல், அதன் சொத்துமதிப்பானது, 18.87 சதவிகிதத்தில் இருந்து 7.39 சதவிகிதமாக அதிரடியாக சரிந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத கணக்கெடுப்பின் படி, கடந்த காலாண்டில் அந்த எஸ் பேங்க் நிறுவனத்திற்கு 18,564 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கின்றது என்ற, அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகி உள்ளது.
இதனால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கலங்கிப் போய் உள்ளனர். இருப்பினும், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எதுவும் ஆகாது என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.