உத்திரப் பிரதேசத்தில் ஒரே நாளில் தோன்றிய இடி மற்றும் மின்னலுக்கு 23 பேர், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது தென்மேற்குப் பருவ மழையானது, வட இந்தியாவினை வாட்டி எடுக்கின்றது. பீகார், ஒடிசா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மும்பை உள்ளிட்ட நகரங்களில், மழை நீர் வெள்ளமாக ஓடுகின்றது. இந்த நிலையில், பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன் வந்த இடி மின்னல் காரணமாகப் பலர் பலியாகி உள்ளனர்.
அந்த சோகம் மறைவதற்கு முன்னர், தற்பொழுது உத்திரப் பிரதேசத்தில் 23 பேர் இந்த இடி மின்னலுக்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக, பிரக்யராஜ் மாவட்டத்தில் 9 பேரும், மிர்சாபூரில் 10 பேரும், கௌசாம்பி என்றப் பகுதியில் 4 பேரும் பலியாகி உள்ளதாக, உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இடி மற்றும் மின்னலால் இறந்தவர்களுக்கு, சுமார் 4 லட்ச ரூபாயினை நஷ்ட ஈடாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த இடி மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம், தற்பொழுது உபி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.