சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 2,800 பேர் பலியாகி உள்ளனர். மேலும், உலகம் முழுக்க 81,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக, அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
கடந்த 55 நாட்களுக்குள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வைரஸால் உருவாகும் நோய்க்கு, தற்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்த கோவிட்-19 பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.
சீனாவினை அடுத்து தென் கொரியா நாடு தான், இந்த கோவிட்-19 வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 8க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில், டைமன்ட் பிரின்சஸ் என்ற கப்பலானது, கோவிட்-19 பாதிப்பு உள்ளவர்களின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த கோவிட்-19 நோயினை தடுக்கவில்லை என்றால், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்ப்படும் என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளது.
சீனாவில், விரைவில் நிரந்தரமாக வன விலங்குகளை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன. இதன் மூலம், இது போன்ற புதிய நோய்கள் வராமல் இருக்க செய்ய இயலும் என நம்பப்படுகின்றது.