கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை உலகம் முழுவதும் 3,000க்கும் அதிகமானோர் மரணமடைந்து இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீனாவின், ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸானது, தற்பொழுது 40 நாடுகளில் பரவி இருக்கின்றது என, அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்று கூடுதலாக மூன்று பேருக்கு இந்த நோய் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சீனாவினைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் இந்த வைரஸ் காரணமாக பலர் மரணமடைந்து வருகின்றனர். சீனாவினை அடுத்து, தென் கொரியாவில் தான் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 4,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 54 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், தென் கொரியா தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, இந்த கொரோனா வைரஸிற்கு கோவிட்-19 எனப் பெயர் வைத்துள்ளது. இந்த வைரஸால், மருத்துவ உலகிற்கு ஆறாவதாக எச்சரிக்கையையும் வெளியிட்டது. தற்பொழுது இதன் பரவும் தன்மையானது மிகவும் அதிகமாகவும், வேகமாகவும் உள்ளது. தற்பொழுது வரை, உலகம் முழுக்க சுமார், 85,000 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்க்கப்பட்டு உள்ளனர். 7,000 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
முதன் முறையாக இன்று ஸ்காட்லாந்து, அர்மேனியா, டோமினியன் ரீபப்ளிக், ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிலும், இந்த வைரஸால் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை, சீனாவிற்கு வந்து சென்றவர்கள் மூலம் பரவி வந்த வைரஸானது, எப்படி உலகம் முழுக்க பரவுகின்றது எனத் தெரியாத புதிராகவே உள்ளது. இன்று வரை, இதற்கான அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.