தமிழகம் முழுவதும் தற்பொழுது பிளஸ்-2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், பிளஸ் ஒன் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மார்ச் 24ம் தேதி அன்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வினை, தமிழகம் முழுவதும் சுமார், 34,000 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக, தேர்வு எழுத வரவில்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். மார்ச் 31ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் யாரும் நடமாட அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், கடைசித் தேர்வினை எழுத மாணவர்கள் வரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்றத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, தேர்வு எழுதாத மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடத்தப்படும் எனவும், அதற்கானத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.