இன்று ஒரே நாளில் 527 பேருக்கு, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதிலும், சென்னை மாவட்டத்தில் மட்டும், சுமார் 308 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், கடந்த வாரம் முழு ஊரடங்கு, அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய நாளன்று, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டது.
இந்த அனுமதியின் பொழுது, கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், கோயம்பேடு மார்கெட் பகுதியில் குவிந்தனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்கள் தாங்கள் வாங்கியப் பொருட்களை, தங்களுடைய மாவட்டங்களுக்குக் கொண்டு சென்றனர்.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே, தினமும் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 572 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதில், ஆண்கள் 377 பேரும், 150 பெண்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது வரை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையானது, 3550 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். இதனால், மொத்தமாக தமிழகத்தில் 31 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர்.
இன்று ஒரே நாளில், சுமார் 12,863 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசதோனை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 2107 பேர், மருத்துவமனைகளில், இந்த கொரோனா வைரஸிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று வரை மொத்தமாக தமிழகத்தில் மட்டும், 2392 ஆண்களும், 1157 பெண்களும், ஒரு திருநங்கையும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு பேர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள, கோயம்பேடு மார்க்கெட்டினை தற்பொழுது மாநில அரசு மூடியுள்ளது. மத்திய அரசின் சுகாதாரக் குழு ஒன்று, சென்னைக்கு இன்று வந்துள்ளது. அது தற்பொழுது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்தும், மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.