இந்திய நாட்டின் 71வது குடியரசுத் திருவிழாவானது, கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் பொல்சோனாரோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சியில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில், முதன் முறையாக முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் கலந்து கொண்டார். 21 குண்டுகள் முழங்க இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைவர் முன்னிலையும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியினை ஏற்றினார்.
பின்னர், முப்படைகளின் மரியாதையையும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலம் சார்பிலும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டெல்ல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பெருமையினை எடுத்துரைக்கும் வகையில், நடனங்களும் ஆடல் பாடல்களும் இடம் பெற்றன. இதில், தமிழகர்கள் வணங்கும் தெய்வங்களுள் ஒருவரான அய்யனாரின் உருவமும் ராஜபாதையில் பவனி வந்தது.
இதனைப் பலரும் கண்டு ரசித்தனர். இந்த குடியரசுத் தினத்தில் மட்டுமே, பல புதிய படைப் பிரிவுகள், முதன் முறையாக கலந்து கொண்டுள்ளன. தேசிய மாணவர் படை, தேசிய பெண்கள் மாணவர் படை, ராபேல் விமானம், தேஜஸ் விமானம், லைட் காம்பேட் ஹெலிகாப்டர், ஆகாஷ் மிசைல் சிஸ்டம் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன.
மேலும், இந்திய இராணுவத்தில் புதிதாக இடம் பெற்றுள்ள டி-90 டேங்குகளும் இந்த அணி வகுப்பில் இடம் பெற்றன. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அணி வகுப்பினைக் காண பல்லாயிரம் பேர் குவிந்தனர். இந்த நிகழ்ச்சியில் வீர தீர சாகசங்களில் ஈடுபட்ட இந்திய வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி, இந்தியக் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்.