நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்பொழுது, நடிகர் சங்கத்தில் பரபரப்பான புகார் ஒன்றினைக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென என்றும் அழியாத ஒரு இடத்தினைப் பிடித்திருப்பவர், நடிகர் வடிவேலு. அவருக்கென தனி ரசிகர் படையே உள்ளது. தற்காலத்தில் அவர் நடிக்காமல் இருந்தாலும், அவருடைய பழைய காமெடிகளுக்கு இன்னும் மவுசு குறையவே இல்லை. வடிவேலுவுக்குப் பிறகு பல காமெடி நடிகர்கள் வந்துவிட்ட போதிலும், வடிவேலுவின் இடத்தினை யாரும் தொட முடியவில்லை.
அப்படிப்பட்ட நடிகருக்கும், நடிகர் சிங்கமுத்துவுக்கும் இடையில் நிலப் பிரச்சனைக் காரணமாக, வழக்கு நடைபெற்று வருகின்றது. இதனால், இரண்டு பேரும் பேசிக் கொள்வது கிடையாது. இந்நிலையில், நடிகர் மனோபாலா அவர்கள், தன்னுடைய யூடியூப் சேனலுக்காக சிங்கமுத்துவினை பேட்டி எடுத்தார். அதில், கலந்து கொண்ட சிங்கமுத்து, நடிகர் வடிவேலு பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார்.
இதனை ஒரு சிலர், வாட்ஸ் ஆப் குரூப்களிலும் பரப்பிவிட்டனர். இந்த விஷயம் நடிகர் வடிவேலுவிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரில், தன்னைப் பற்றி சிங்கமுத்து தரக்குறைவாக பேசியுள்ளதாகவும், வழக்கு நிலுவையில் உள்ள பொழுது இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகுந்த மனக் கஷ்டத்தினை தந்திருப்பதாகவும், ஆதலால் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது, தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.