அருணாச்சலப் பிரதேசத்தில் பசியில் பாம்பை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிரமப்படுகின்றனர். இந்திய அரசாங்கத்தின் சார்பில், ரேசன் கடைகளின் மூலம் இலவச அரிசி, கோதுமை உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அவைகள் ஒரு குடும்பத்திற்குப் போதுமானதாக இருக்காது எனப் பலரும் தங்களுடையக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகின்றது. அந்த வீடியோவில், மூன்று வாலிபர்கள், கையில் இறந்த பாம்பு ஒன்றினைப் பிடித்துள்ளனர். அது பற்றி, அவர்கள் விளக்கமும் அளித்துள்ளனர்.
அந்த வீடியோவில், எங்களுக்குப் பசிக்கின்றது. உணவு இல்லை. எங்களுக்கு தற்பொழுது வேலையும் இல்லை. ஊரடங்கால் எங்கள் வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. சாப்பாட்டிற்கு வழியில்லாத காரணத்தால், இந்தப் பாம்பினை அடித்துக் கொன்றோம். நாங்கள் இதனை உண்ண உள்ளோம் என்கின்றார்கள். பின் இறந்தப் பாம்பின் உடலினை எடுத்து, வாழை இலையில் வைக்கின்றனர். இந்த வீடியோவானது வைரலாகி வருகின்றது.
இந்திய அரசியலமைப்பின் படி, இந்த செயலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு, ஜாமீன் முதலிய உதவிகளும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள அருணாச்சல பிரதேச அரசு, இதுவரை 20,000 ரேசன் அட்டைகளுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கியுள்ளதாகவும், அவர்கள் பசிக்காக அவ்வாறு செய்யவில்லை எனவும் கூறியுள்ளது.