மண்டை ஓடு! கொலை முயற்சி! பெண்ணைக் கடத்திய பேராசிரியர் சிக்கினார்!

01 March 2020 அரசியல்
kidnap.jpg

ஆந்திராவில் உதவிப் பேராசிரியர் ஒருவர், பெண்ணைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆந்திராவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், உதவிப் பேராசிரியராகப் பணி செய்தவர் கிருஷ்ண மோகன். அவர் கல்லூரியில், பயின்ற மாணவி ஒருவரைக் காதலித்து உள்ளார். தன்னுடையக் காதலை அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவியின் படிப்பும் முடிந்தது.

ஆனால், அந்த உதவிப் பேராசிரியரின் காதல் மட்டும் முடியவில்லை. அந்த மாணவித் தன்னுடைய மேற்படிப்பிற்காக, பெங்களூரில் தங்கிப் படித்துள்ளார். அங்கு சென்று கிருஷ்ணமோகன், தன்னைக் காதலிக்கும் படி, வற்புறுத்தியுள்ளார். விஷயத்தினைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள், மாணவியினை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், தங்கள் வீட்டிலேயே அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், உறவினர் வீட்டு விஷேசத்திற்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பெண் செல்லவில்லை. இந்நிலையில், அந்த வீட்டிற்கு பர்தா அணிந்து கொண்டு ரகசியமாக வந்துள்ள கிருஷ்ணமோகன், அந்தப் பெண்ணையும் வற்புறுத்தி, பர்தா அணிய வைத்துக் கடத்திச் சென்றுள்ளார்.

இந்த விஷயம், பெற்றோருக்குத் தெரிந்து விட்டது. உடனடியாக, அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து உடனடியாக அந்த மாணவியின் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அந்த வீட்டில், மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் எரிந்து கொண்டு மெழுகுவர்த்தி இருந்தனர். வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் திறந்து இருப்பதும், அதிலிருந்து கேஸ் கசிந்து கொண்டு இருப்பதும் கண்டுபிடித்து அதனை சரி செய்தனர்.

அங்கிருந்த பெண்ணை, பர்தா அணிய வைத்து அழைத்துச் சென்றதனையும் கண்டுபிடித்துள்ளனர். பின்னர், கிருஷ்ணமோகன் அப்பகுதியில் நடமாடியதை உறுதி செய்தனர். இதனடிப்படையில், கிருஷ்ணமோகனின் போன் எண்ணினை வைத்து, அவர் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடித்தனர். பின்னர், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியினையும் மீட்டனர்.

கிருஷ்ண மோகனை கைது செய்து விசாரிக்கையில், சுடுகாட்டிற்குச் சென்று, அங்கிருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை எடுத்து வந்ததாகவும், அதனை அந்தப் பெண்ணின் வீட்டில் போட்டதாகவும், அந்த வீட்டில் உள்ள உறவினர்கள் இந்தப் பெண் எரிந்து இறந்து விட்டார் என, நம்ப வைப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் வீடு தீ பிடித்து எரிய வேண்டும் என்பதற்காக, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை கசிய வைத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர்.

HOT NEWS