ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரினைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். பால் வியாபாரம் மட்டுமின்றி, ஊர்காவல் படையிலும் பணியாற்றி வருகின்றார். அவர் சிட்கோ பகுதியில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த நபர், உங்களுக்கு பணம் எடுக்க உதவுவதாகக் கூறியுள்ளார். இதனிடையே, அவரிடம் தன்னுடைய ஏடிஎம் கார்டினை கொடுத்து பணம் எடுத்துத் தரும்படி கூறியுள்ளார் சுரேஷ் குமார்.
முதலில் 500 ரூபாயை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், பணம் வரவில்லை என்பதால், சுரேஷ் குமார் வீடு திரும்பியுள்ளார். ஆனால், வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய மொபைலுக்கு 19,500 ரூபாயானது, ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குறுந்தகவல் வந்துள்ளது. இதனால், அதிர்ந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவின் வீடியோவினைப் பார்த்த பொழுது, சுரேஷ் குமாரிடம் வாங்கிய ஏடிஎம் கார்டிற்கு பதிலாக, வேறொரு ஏடிஎம் கார்டினை சுரேஷ் குமாரிடம் அந்த மர்ம ஆசாமி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் சுரேஷிடம் இருந்து திருடிய ஏடிஎம் கார்டினை வைத்துப் பணம் எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த மர்ம ஆசாமிக்கு வலை விரித்தனர். இந்நிலையில், அவர் 48 வயதுடைய கதிரேசன் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியினைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் அவரை நெருங்கியப் போலீசார் கைது செய்தனர்.
அவரை மேலும் விசாரிக்கையில், இது போன்று பல இடங்களில் தன்னுடையக் கை வரிசையினைக் காட்டியிருந்திருக்கின்றார் என்பதை கேட்டு அதிர்ந்தது காவல்துறை. தற்பொழுது காவல்துறை தன்னுடைய ஸ்டைலில் தீவிர விசாரணையைச் செய்து வருகின்றது.