ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறை, குத்துயிரும், கொலையுயிருமாக இருந்து வந்தது. தற்பொழுது, கொரோனா வைரஸ் காரணமாக, கிட்டத்தட்ட முடிவிற்கே வந்துவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு, பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் வாகன உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால், அனைத்து வாகன உற்பத்தியாளர்களும், தங்களுடைய நிறுவனத்தில் இருந்து ஆட்குறைப்பு வேலையில் ஈடுபட்டன. மாதத்தின் பாதி நாட்களை விடுமுறையாக அறிவித்தன.
இதனால், பல லட்சம் பேர் வேலை வாய்ப்பினை இழந்தனர். இந்தப் பிரச்சனை, கடும் தலைவலியாக மத்திய அரசுக்கு அமைந்தது. இதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். இல்லையென்றால், கண்டிப்பாக பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும் என, நிபுணர்கள் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்கள், மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பலவித சலுகைகள் வழங்குவதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் வாகன உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே, பணியில் உள்ளனர்.
உற்பத்தி மட்டுமல்ல, அத்தியாவசியக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், வியாபாரமும், வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் வெளியில் நடமாடுவதில்லை. இதனால், ஏப்ரல் மாதம் எவ்வித விற்பனையும் நடைபெறவில்லை என, மாருதி சுசுக்கி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் மட்டுமல்ல, பல நிறுவனங்கள் இவ்வாறு தன்னுடைய வியாபாரத்தினை இழந்துள்ளன.
ஊரடங்கு உத்தரவானது நீக்கப்படால் கூட, விற்பனை நடைபெறுமா என்பது சந்தேகமே. காரணம், மீண்டும் பொதுமக்கள் வேலைக்குச் சென்று, அவர்கள் ஏற்கனவே வாங்கியுள்ள கடன்களைக் கட்ட வேண்டும். வீட்டு வாடகை, பில் உள்ளிட்டவைகளைக் கட்ட வேண்டும். இந்த சூழ்நிலையில் மக்கள் மீண்டும் கார் உள்ளிட்டவைகளை வாங்கினால், அது அதிசயமே.