சீனாவில் தற்பொழுது, கொரோனா வைரஸால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பறவைக் காய்ச்சலானது பரவ ஆரம்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13,000க்கும் மேற்பட்டோர், மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். சீனா மட்டுமின்றி, கிட்டத்தட்ட 30 நாடுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பானது நிலவி வருகின்றது. இதனை மேலும் பரவாமல் தடுக்க, சீனாவின் எல்லைப் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சீனாவின் சாயோங் பகுதியில் உள்ள பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள, கோழிகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சுமார் 4,500 கோழிகளிடம் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை அந்நாட்டு, விவசாயத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அந்த கோழிகளைத் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
கொரோனா வைரஸைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலும் பரவினால், விளைவு இன்னும் மோசமாகும் என, தற்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அந்நாட்டு விவசாயத் துறை.