விரக்தியினால் தான் நமக்கு சுதந்திரம் வழங்கினார்கள் எனவும், மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்பது ஒரு நாடகம் எனவும், பாஜக எம்பியான அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், உத்தரா கன்னடா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சால், தற்பொழுது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜகவினர் காந்தியினை சுட்ட, கோட்சேவை தேச பக்தன் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், இவரும் காந்தியினை எதிர்த்து உள்ளார்.
அவர், பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசும் பொழுது, காந்தியின் உண்ணாவிரதப் போராட்டமும், சத்தியாகிரகம் என்பதுமே ஒரு நாடகம் தான். தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள் யாரையும், போலீசார் ஒரு முறைக் கூடத் தாக்கப்படவில்லை. சுதந்திர இயக்கம் என்பதே பெரிய நாடகம் தான்.
காங்கிரஸ் கட்சியினை ஆதரிக்கும் மக்கள், இந்த நாடகத்தினை நம்புகின்றனர். உண்மையில், அது பொய். சத்தியாகிரகத்தின் காரணமாக, ஆங்கிலேயர்கள் நம் நாட்டினை விட்டு வெளியேறவில்லை. மாறாக, விரக்தியால் தான், அவர்கள் வெளியேறினர். காந்தியால் அல்ல என அவர் பேசியுள்ளார்.