வருகின்ற மே-18ம் தேதியில் இருந்து, 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க, தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் காரணமாக மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில், பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமான சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனால், பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், போக்குவரத்துத் துறையின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இருப்பினும், கொரோனா வைரஸ் பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால், இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்கவும், அதே சமயம், பொதுப் போக்குவரத்தினை அனுமதிக்கும் வகையிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப், அனைத்து தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கும், சுற்றரிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.
அதில், மே-18ம் தேதியில் இருந்து தமிழக பேருந்துகள், 50% மட்டும் இயக்க கூறப்பட்டு உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேருந்துகளில், இடைவெளி விட்டு அமரவும், வரிசையில் நின்று பொதுமக்கள் ஏறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. பேருந்திற்கான டிக்கெட்டினை, கூகுள் பே போன்ற இணைய வசதிகளைப் பயன்படுத்தி எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, காய்ச்சல் உள்ளிட்டவைகளை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பேருந்துகளை இடைவெளி விட்டு நிறுத்தவும், பேருந்து ஜன்னல் கண்ணாடிகளைத் திறந்தே வைக்கவும் கூறப்பட்டு உள்ளது.