சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், அனுமதி இன்றி கேன்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்த 300 தொழிற்சாலைகளுக்கு, தமிழக அரசு சீல் வைத்துள்ளது. இதனையடுத்து, தண்ணீர் கேன் தொழிற்சாலை உரிமையாளர்கள், சென்னையில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அளவுக்கு மீறி, நிலத்தடி நீரினை இந்த நிறுவனங்கள் உறிஞ்சி எடுப்பதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு, உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாக யாரெல்லும் நீர் எடுக்கின்றனர் என தமிழக அரசு விசாரணை நடத்தியது.
அதில், உரிமம் இன்றி, 300க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் தொழிற்சாலைகள் இயங்கி வருவதை கண்டுபிடித்தது. அவைகளுக்கு, தற்பொழுது சீல் வைத்துள்ளது. மேலும், நிலத்தில் இருந்து நீர் எடுக்க, கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதனால், இன்று தண்ணீர் கேன் உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால், சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்டப் பகுதிகளில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.