ரிபப்ளிக் டிவியின் தலைமை பத்திரிக்கை ஆசிரியராகவும், நிறுவனருமான அர்னாப் கோஸ்சுவாமி உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டைம்ஸ் நவ் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அர்னாப் கோஸ்வாமி. அவருடைய அபார உழைப்பின் காரணமாக, ரீபப்ளிக் டிவி என்ற ஒன்றினை உருவாக்கினார். அவருக்கென்று தனி ரசிகர் படையே உண்டு. அவர் மீது, தற்பொழுது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெரோஸ் சேக் மற்றும் நிதிஸ் சார்தா உள்ளிட்டோர் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது, மும்பையின் அலிபாக் காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அன்வி நாயக் என்பவர் தான் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது கடிதம் ஒன்றினை எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதம் அவருடன் இருந்துள்ளது. அதில், என்னுடைய மரணத்திற்குக் காரணம் இவர்களே என, பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் எனக்குத் தராத 5.40 கோடி ரூபாயினைத் தராத காரணத்தினால், தானும் தன்னுடைய தாயும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில், தன்னுடைய வீட்டில் உள்ள மேல்தளத்தில் நாயக்க்கும், தரைதளத்தில் உள்ள படுக்க அறையில், அவருடைய தாயும் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். அர்னாப் 83 லட்ச ரூபாயும், பெரோஸ் சேக் நான்கு கோடி ரூபாயும், நிதிஸ் சார்தா 55 லட்ச ரூபாயினையும் தராததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தினை கைப்பற்றியுள்ள போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து பதிலளித்துள்ள ரிபப்ளிக் டிவி எடிட்டர் நிரஜ்சன் நாராயணசாமி கூறுகையில், எங்கள் தரப்பில் ஒப்பந்தத்தின் படியே செயல்படுகின்றோம். போலீசாருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.