இந்தியாவில் எப்பொழுதுதாவது தான், இந்த மாதிரி பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்படும். அப்படியொரு மாபெரும் சோதனையில் தற்பொழுது சிபிஐ ஈடுபட்டு இருக்கின்றது. சுமார் 7000 கோடி ரூபாய் மதிக்கத்தக்க அளவில், வங்கி மோசடியானது நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகின்றது.
இதனையடுத்து, நேற்று ஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. டெல்லி, குஜராத், ஹரியானா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், சண்டிகர், கேரளா, தமிழ்நாடு தெலுங்கானா, உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்ற மாநிலங்களில் இந்த வங்கி மோசடியானது நடைபெற்று உள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலையில் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், 4 வழக்குகள் 1000 கோடி ரூபாய் மோசடி எனவும், 11 வழக்குகளில் நூறு கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் அளவிலும் மோசடிகள் நடைபெற்று உள்ளதாக கருதப்படுகின்றது.
இந்த வங்கி மோசடிக் குற்றச்சாட்டில், ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தீனா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆகியவை சிக்கியுள்ளன.