இன்று காலையில், பிரதமர் மோடி தலைமையில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளத்தில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் சம்பத்திலும் 30 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளன. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து எம்பிக்களின் சம்பளமும் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பளக் குறைப்பானது, அடுத்த ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊதியக் குறைவால் சேமிக்கப்படும் பணமானது, கொரோனா நிவாரண நிதியாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முடிவானது, தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது. மேலும், எம்பிக்களுக்கு வழங்கப்படும், தொகுதி மேம்பாட்டு நிதியானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படாது எனவும், நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
எம்பிக்களின் மேம்பாட்டு நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு உள்ள 10 கோடி ரூபாயானது, உடனடியாக மத்திய அரசின் நிதியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.