பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், இனி சீனப் பொருட்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களான BSNL உள்ளிட்டவைப் பயன்படுத்த வேண்டாம் என, மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் பாதுகாப்புக் கருதி யாரும் சீனாவின் தொழில்நுட்பங்களையும், உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டாம் என BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், புதிய டென்டர்களை நிறுத்தவும் கூறியுள்ளது. BSNL நிறுவனம் இசட்இஇ நிறுவனத்துடன் இணைந்து, தொலைத்தொடர்பு சேவையினை வழங்கி வருகின்றது. அதே போல் ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்தின் உதவியுடன் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கி வருகின்றன.
இத்தகைய சூழலில், தனியார் நிறுவனங்களையும் அறிவுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, சீன நாட்டு உபகரணங்களை தொலைத்தொடர்பிற்குப் பயன்படுத்தும் பொழுது, தகவல் திருட்டு, பாதுகாப்பின்மை உள்ளிட்டப் பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாகவும், எனவே இவ்வாறு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.