அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பகுதியினைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போய் உள்ளார். அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொழுது, அவருடைய உடலானது வறண்டு கிடந்த குளத்தின் புதர் பகுதிகளில் கிடந்தது. இதனைப் பார்த்த அக்குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில், அக்குழந்தையின் உடலில் இரத்தக் காயங்கள் இருப்பதாகவும், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து, தாமாக முன் வந்து விசாரித்து வருகின்றது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம்.
இது குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், இந்த கொடூர செயலுக்குக் காரணமாவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் எனவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், 5 லட்ச ரூபாயினை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.