கடந்த திங்கட்கிழமை அன்று, நள்ளிரவு மக்களவையில், குடியுரிமை சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
இஸ்லாமியர் அல்லாத பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிகப் பெரும்பான்மையைப் பெற்றதால், இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த மசோதாவினை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும், இது குறித்துப் பேசியுள்ள அமித் ஷா, எதிர்கட்சிகள் தயவு செய்து வெளிநடப்பு செய்ய வேண்டாம் எனவும், அவர்களுடைய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சிவசேனா, திமுக, ஏஐஎம்எம், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்தன. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக, இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது.