கர்நாடகாவில், காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தினை, இயேசுவின் சிலையை வைப்பதற்காக தானமாகக் கொடுத்துள்ளார். இதனை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகவின் கப்பல்லா மலைப் பகுதியில், ஹாரோபெலே என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள தன்னுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தினை, கிறிஸ்தவர்கள் வழிபட தானமாகக் கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான சிவக்குமார். மேலும், அங்கு 114 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான இயேசுவின் சிலையை நிறுவி உள்ளனர். அந்த சிலையானது, ஒரே கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள சிலையினை, கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்று வழிபட்ட சிவக்குமார், தன்னுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார். அதற்கு, தற்பொழுது பாஜக தரப்பில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கர்நாடகாவின் ஆளும் பாஜக அரசின் அமைச்சரான கேஎஸ் ஈஸ்வரப்பா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ராமர் கோயில் விவகாரத்தில், காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்பொழுது இயேசுவிற்கு சிலை வைத்துள்ளனர்.
மக்களை ஏமாற்றி, வாக்கு சேகரிக்கவே இத்தகையச் செயல்களை அவர்கள் செய்கின்றனர். என்று டிவீட் செய்துள்ளார். மேலும், இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே எஸ் ஈஸ்வரப்பா, இயேசுவிற்கு சிலை வைத்தது நல்ல விஷயம் தான். ஆனால், சிவக்குமார் தீவிரமான ஆதி சுன்சிங்கிரி முத்துசுவாமியின் பக்தர். அவர் அங்கு எதற்குச் சென்றுள்ளார் என்பதுப் பற்றி யோசியுங்கள். கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைப் பெறவே இத்தகைய நாடகத்தினை அவர் தற்பொழுது அரங்கேற்றி உள்ளார் எனக் கூறியுள்ளார். இவரைத் தவிர்த்து, மேலும் ஒரு சிலர் இவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் சிவக்குமார் டிவிட் செய்துள்ளார். அதில், நான் அனைத்து மதங்களையும், சமமாக பார்ப்பவன். அங்குள்ளவர்களின் பக்தியினை மதிப்பதும் என்னுடையக் கடமை என்று கூறியுள்ளார்.