தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்கின்ற, இந்தியர்களின் போக்குவரத்துச் செலவினை ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. வருகின்ற மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும், வேலைக்கு சென்ற இடத்தில் தங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில், ரோட்டில் உள்ள பாலங்களுக்கு அடியில் அவர்கள் தங்கி இருக்கின்றனர். அவர்கள் தற்பொழுது, தங்களுடைய ஊர்களுக்குச் செல்ல இரயில்களை இயக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இருப்பினும், அதற்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 50 ரூபாயினை, வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு, கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வெளியூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் செலவினை, காங்கிரஸ் ஏற்பதாக, சோனியாகாந்தி கூறியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது தற்பொழுது, சமூக வலைதளங்களில், பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.