உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்றக் காரணத்தால், அதற்கு கொரோனா மாயி எனப் பெயர் வைத்து அதை அம்மாநில மக்கள் வணங்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில், தற்பொழுது கேரளாவிலும் கொரோனா தேவி என்றப் புதிய தெய்வத்தினை ஒருவர் உருவாக்கி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இதுவரை 85 லட்சம் பேர் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடைக்கல் பகுதியினைச் சேர்ந்தவர் அனிலன் முகூர்த்தன். ஆன்மீகவாதியான இவர், தன்னுடைய வீட்டின் மாடியில் கொரோனா வைரஸிற்கு ஒரு தெய்வத்தினையே உருவாக்கி உள்ளார். அதற்கு கொரோனா தேவி எனப் பெயர் வைத்தும் உள்ளார். அந்த தேவிக்காக தற்பொழுது, தினமும் பூஜைகள் மற்றும் மதச் சடங்குகளை செய்கின்றார்.
இது பற்றி அவர் பேசுகையில், தமிழகத்தில் சின்னம்மைப் பரவியது. பலரும் உயரிழந்தனர். ஆனால், தற்பொழுது அதனையே மாரியம்மன் எனக் கூறி வழிபட்டு வருகின்றனர். இதனை எங்கள் மாநிலத்தில் வைசூரி என்போம். அதற்கும் வழிபாடு உண்டு. இதே போல், தற்பொழுது கொரோனா தேவிக்கு சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தில் இதனையும் மக்கள் வணங்க ஆரம்பிப்பர்.