சீனாவில் உள்ள ஊஹான் நகரில், கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது கோவிட்-19 எனப்படும், கொரோனா வைரஸ். தற்பொழுது, அண்டார்டிகா எனும் பனியால் ஆன, கண்டத்தினைத் தவிர்த்து, மற்ற ஆறு கண்டங்களிலும், தீயாகப் பரவி வருகின்றது. இதனால், உலக நாடுகள் கவலையடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், மருந்து கண்டுபிடிக்க இயலாமல் விஞ்ஞானிகள் திணறிக் கொண்டு இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. சீனாவினைத் தொடர்ந்து, தென் கொரியா, இத்தாலி, ஈரான், இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் பலரும் தற்பொழுது இந்த நோய் தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் 194 பேர் இந்த நோயால், பலியாகி உள்ளனர். இத்தாலியில், 150க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகி உள்ளனர். இந்த நிலை நீடித்தால், உலகின் மக்கள் தொகையில் பாதி பேர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இதனால், சர்வதேச சுகாதார அமைப்புக் கவலைத் தெரிவித்துள்ளது. மருந்துகளைக் கண்டுபிடிக்க, புதிய குழுக்களையும் அந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும், தற்பொழுது தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். அந்த நோய் வந்தால், என்ன செய்வதென்று யாரிடமும் போதுமான சிகிச்சை வழிமுறைகள் கிடையாது. இந்த வைரஸ் உருவாகி 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் பேரிடம் பரவியுள்ளது.
இதுவரை, எந்த ஒரு வைரஸூம் இவ்வளவு வேகமாகப் பரவியதாக வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், இந்த நோயால் பலியாபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.