உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால், நான்கரை லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வைரஸானது, பல நாடுகளில் தற்பொழுது தான் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தற்பொழுது மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதன் வீரியம் மற்றும் தொற்றும் தன்மை மிக அதிகமாக இருப்பதால் இங்கு கொரோனா வைரஸின் அடுத்த அலைப் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்புக் கவலைத் தெரிவித்துள்ளது.
தற்பொழுது தென் கொரியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைப் பரவியுள்ளதாக, அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில், சீனாவின் பீஜிங் நகரிலும் இரண்டாவது அலையானது பரவி உள்ளதாகவும், அங்கு மிகப் பெரிய அளவில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், கூறப்படுகின்றது. இது குறித்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் புதிய ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், உலகம் முழுக்க பத்து நாடுகளில் இந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது, வேகமாகப் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், சுவிஸ்ஸர்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், உக்ரைன், வங்கதேசம், இந்தோனேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸின் இரண்டாவது அலையானது பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளது.
இந்த இரண்டாவது அலையானது, மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பெரும்பாலும் அறிகுறிகளேத் தெரியாமல் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.