அமெரிக்காவில், தற்பொழுது இரண்டு பூனைகளுக்கு கொரோனா வைரஸானது பரவி இருக்கின்ற அதிர்ச்சிகரமான செய்தி, வெளியாகி உள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த மாதம், இந்த வைரஸ் பாதிப்பானது உயிரியல் பூங்காவில் இருந்த புலிக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனால், உலக நாடுகள் அனைத்தும் பீதி அடைந்தன. இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. ஏற்கனவே, பெல்ஜியத்தில் நாய்குட்டி, சீனாவில் எட்டு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரினைச் சேர்ந்த இரண்டு பூனைகளுக்கு, இந்த வைரஸானது பரவி இருக்கின்றது. இரண்டும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், அவைகளின் உரிமையாளர்கள் மூலம் பரவி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், ஆரம்ப நிலையில் தான் இந்த வைரஸானது உள்ளது எனவும், விரைவில் அவை குணமாகிவிடும் என்றும் விஞ்ஞானிகளால் கூறப்படுகின்றது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு, இந்த வைரஸ் பரவவில்லை என்றாலும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவி இருப்பது அச்சத்தினை உருவாக்கி உள்ளது.