இந்தியாவிலேயே முதன் முதலாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது கேரளா தான். அந்த மாநிலத்தின் தான், முதன் முதலாக இந்த வைரஸானது கண்டறியப்பட்டது. அங்கு, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 376 பேரில், தற்பொழுது 179 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இது மாபெரும் சாதனையாகவே கருதப்படுகின்றது. அந்த அளவிற்கு அங்குள்ள நோயாளிகள் குணமாகி உள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, அரசாங்கத்தின் சீர்மிகுத் திட்டங்களும், பொதுமக்களின் ஒத்துழைப்புமே ஆகும். பாதிக்கப்பட்டவர்களில், 232 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களை சோதனைகள் மற்றும் ட்ராக்கிங் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல், குணப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அம்மாநில சுகாதாரத் துறையானது சிறப்பாக செய்துள்ளது. இதற்காக, 30,000 சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவ்வளவு வேலைகளையும் சிறப்பாக செய்த காரணத்தினால் தான், தற்பொழுது வரை வெறும் இரண்டு பேர் மட்டுமே மரணமடைந்தனர்.
இது குறித்துப் பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், உலக நாடுகள் அளவில், 5.75 சதவிகிதமாக இருக்கின்ற மரணமடைபவர்களின் அளவானது, கேரளாவினைப் பொறுத்த வரையில், 0.58 சதவிகிதமாக உள்ளது. தற்பொழுது வரை, 47% பேர் குணமாகி இருப்பது மாபெரும் விஷயமாகும்.
இன்னும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையினைக் காட்டிலும், குணமாகுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார். விரைவில் அனைவரும் நலமடைவர் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும், கேரள மாநிலம் முன்னுதாரணமாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.