இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்தினை, துரிதகதியில் சோதனை செய்தால், அதன் விளைவுகள் ஆபத்தில் கூட முடியலாம் என, விஞ்ஞானிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, ஒரு கோடி 15 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் பரவி உள்ளது. இதனால், 4,75,000 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. தற்பொழுது வரை, நூற்றுக்கணக்கான மருந்துகள், பரிசோதனையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், இந்தியாவின் ஐசிஎம்ஆர் இணைந்து, கோவாக்சின் என்றப் புதிய மருந்தினைத் தயாரித்து உள்ளன. இந்த மருந்தானது, அதிக எதிர்ப்பு சக்தி உடையதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை தற்பொழுது இந்தியாவின் 12க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இரண்டு கட்ட பரிசோதனைகளையும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடித்து, ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளதாக, ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், இதற்கு தற்பொழுது கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த மருந்தினை, வேகமாக உருவாக்கும் பொருட்டு விஞ்ஞானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் அழுத்தம் தருவது போல இந்த அறிவிப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் நன்மைகள் நடந்தால் சரி, ஒருவேளை பக்க விளைவுகள் அல்லது ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் பெரிய விபரீதமே ஏற்பட்டு விடும் என்று வைரலாஜிஸ்ட் மற்றும் வெல்கம் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாகி ஷாகீத் ஜமீல் தெரிவித்துள்ளார்.