கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த செவிலியர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்நாட்டினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவினை விட, இத்தாலியில் தான் அதிகளவில் இந்த கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது வரை இத்தாலியில் 7,000 பேர் மரணமடைந்துள்ளனர், 65,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகளில் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இடப்பற்றாக்குறைக் காரணமாக, பலரும் சாலைகளில் சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள மோன்சா நகரத்தில் உள்ள சான் ஜிரார்டோ மருத்துவமனையில் பணியாற்றியவர் டானில்லா ட்ரெஸ்ஸி. 34 வயதுடைய டானில்லா, இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நகரான லாம்போர்டே பகுதியில் தான், பணியாற்றி வருகின்றார்.
அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது, அவர்கள் மூலம் இவருக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இதனால், அவருடைய உடலில் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கவும்பட்டது. இதனை முன்னிட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் தன் மூலம், யாருக்கும் இந்த வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக, தன்னுடைய உயிரினை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, அந்த மருத்துவமனை தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டும் உள்ளது.
அந்த நர்ஸால் கவனிக்கப்பட்டு நோயாளிகள் உட்பட, இத்தாலியில் உள்ள மருத்துவர்களும் நர்ஸ்களும் தங்களுடைய வேதனையை, டானில்லாவிற்காக வெளிப்படுத்தி உள்ளனர்.