டெல்லியில் காற்றின் நிலைமை, மிக மோசமானதாக மாறியுள்ளது. அங்கு தற்பொழுது, காற்றின் மாசினைக் குறைக்க, வாகனங்களில் இருந்து நீர் தெளிக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
தற்பொழுது கிடைத்துள்ளத் தகவலின் படி, காற்றின் மாசின் அளவு 493 என்ற அளவினை எட்டியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் இன்று முதல் அடுத்த 12 நாட்களுக்கு மெட்ரோ ரயிலானது, கூடுதலாக ஒரு நாளைக்கு 61 முறை கூடுதலாக, இயக்கப்பட உள்ளது. டெல்லிப் போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட உள்ளன. கையிருப்பில் உள்ள மின்சாரப் பேருந்துகள் இயக்கபட உள்ளன.
அதே போல் டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், அதே போல் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் என, இரண்டு கட்டங்களாக இயங்க உள்ளன.
காற்று மாசின் காரணமாக, டெல்லியில் கட்டிடம் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசானது குறையாமல், அதிகரித்துக் கொண்டே வருவதால், அப்பகுதியில் வாழும் மக்கள் மூச்சுத் திணறல் போன்ற வியாதிகளை எதிர்நோக்கி உள்ளனர்.
போதிய அளவிலான மரங்கள் இல்லாமை, மக்கள் தொகைப் பெருக்கம், குறைந்த மழைப் பொழிவு, தொழிற்சாலைகள் ஆகியவையே இந்த காற்று மாசிற்குக் காரணமாக கருதப்படுகின்றது. அதிகாலையிலும், இரவு வேளைகளிலும் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும், தனியார் நிறுவனங்களுக்குக் கிடையாது. பள்ளிகளில் நடக்கும் தேர்வுகள், ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த காற்று மாசுள்ள டெல்லியில், ஒரு நபர் ஒரு நாள் அங்கு தங்கி சுவாசிப்பது என்பது, ஒரு நாளைக்கு 40 சிகரெட் பிடிப்பதற்கு சமமான கேட்டினைத் தரும்.
மரம் வளர்க்காமல் விட்டப் பிரச்சனையின் விளைவு தான் இந்த காற்று மாசு. சுவாசிக்கும் நிலையில் உள்ள காற்றானது, நச்சு வாயுவாக மாறுவதற்கு இன்னும் வெகு தூரம் இல்லை. இதனை அரசாங்கம் கவனித்து, மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தால், நீண்ட காலத் தீர்வாக அது அமையும் என்பது மாற்றுக் கருத்து இல்லை.