டெல்லி ராணி ஜான்சி சாலைப் பகுதியில் அமைந்துள்ள, தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்பொழுது வரை 43 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில், மக்கள் அதிக நெருக்கமாக வசிக்கும் அனாஜ் மண்டி என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில், அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தினை அறிந்த பொது மக்கள் உடனடியாக, தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு 15க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் விரைந்து வந்து தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், உறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், தற்பொழுது வரை 43 பேர் இந்த தீ விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு, இழப்பீடாக அவர்களுடையக் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், காயப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீயினை அணைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையேத் தற்பொழுது அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த அடுக்குமாடி கட்டிட உரிமையாளரான ரேஹான் மற்றும் மேலாளர் பர்கான் ஆகியோரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.