ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தேவிந்தர் சிங்கின் காவலானது, ஏப்ரல் 10 வரை நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்து வந்த தேவிந்தர் சிங், கடந்த ஆண்டு இறுதியில், தன்னுடையக் காரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதி அல்தாப், லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நவீத் பாபு மேலும் அவர்களுடைய உதவியாளர்கள் இரண்டு பேருடன் ஸ்ரீநகர் சோதனைச் சாவடியில் வைத்து பிடிபட்டார்.
அவருடையக் காரில், அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டது. அதில், பல உண்மைகளை அவர் கூறியதாக நம்பப்படுகின்றது. இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இவரிடம் விசாரிக்க வேண்டி இருக்கின்றது எனவும், இவருடையக் காவலை நீட்டிக்க வேண்டும் எனவும், போலீஸ் தரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனையடுத்து, வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி வரை, போலீஸ் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.