தேசியக் குடியுரிமை மசோதாவினை எதிர்த்து, வருகின்ற 17ம் தேதி அன்று திமுகவினர், போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்தத் சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசுக்கு துணை நின்று, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.
மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மத்திய பாஜக அரசின் சிறுபான்மையினர் விரோத தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து, ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, திமுக சார்பில், 2019 டிசம்பர் 17 (செவ்வாய் கிழமை) அன்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில், மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கையொப்பமும் உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய, இரண்டு அவைகளிலும் குடியுரிமை மசோதாவிற்கு, திமுக எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட உள்ளது.