திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதவினை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இன்று, போராட்டம் நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இன்று காலையில், திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில், எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையின் அருகில் புறப்பட்ட இந்தப் பேரணியில் 75,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பேரணிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தினை, 5 டிரோன் கேமிராக்கள் மூலமும், 100க்கும் மேற்பட்ட கேமிராக்கள் மூலம் போராட்டத்தினை பதிவு செய்தனர்.
இந்தப் பேரணியில், திராவிடக் கழகம், பெரியார் இயக்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் திமுகவினர் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
ப சிதம்பரம், முக ஸ்டாலின், கேஎன் நேரு, கிவீரமணி, முத்தரசன், வேல்முருகன், திருமாவளவன், ஜவஹீருல்லா, தயாநிதிமாறன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி முடிந்த பின், தொண்டர்கள் முன் பேசிய ஸ்டாலின், குடியுரிமை திருத்தத் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில், நம்முடையப் போராட்டம் தொடரும். இது பேரணி அல்ல, இது போர் அணி.
நேற்று அவசர அவசரமாக, இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, ஆளும் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றமே, நமக்கு போராட அனுமதி அளித்துவிட்டது. திமுக தலைமையில், மதச்சார்பற்ற கட்சிகள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு, அவர்களே விளம்பரம் தேடி தந்துவிட்டனர் எனப் பேசினார்.