சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது உலகம் முழுவதும் 24,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் 5,00,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் அனாவசியமாக வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் தற்பொழுது இந்த வைரஸ் தொற்றானது, கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு, புதிதாக யாரும் இந்த தொற்று உள்ளவர்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
அங்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம், கிருமி நாசினியானது நாடு முழுக்க தெளிக்கப்பட்டது. அதே போல, தமிழகத்திலும் தற்பொழுது தெளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் நடமாட்டமானது, வெளியில் குறைந்துள்ளது.
இதனை முன்னிட்டு, கிருமி நாசினியானது சுகாதாரத்துறையினர் மூலம், ஸ்பிரே முறையில் தெளிக்கப்பட்டு வருகின்றது. விரைவில், 20 முதல் 50 ட்ரோன்கள் வைத்து, கிருமி நாசினிகளை தெளிக்கும் செயலானது நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகையும் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த ட்ரோன்களை தயாரிக்க, சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது தமிழக அரசு.