உலகம் முழுவதும் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், அனைத்து நாடுகளும் கடுமையானப் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் சீனாவில் இருக்கின்ற மற்ற நாட்டு நிறுவனங்கள், சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், அந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சீனாவினை விட்டு வெளியேற உள்ளதாகவும், அவர்கள் இந்தியாவிற்குள் தொழில்துவங்க வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக ஆப்பிள், ஹெச்பி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தனித்தனியாக, கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன வசதிகள் உள்ளன, அரசாங்கம் செய்யும் உதவிகள் என்னென்ன உள்ளிட்டவைகளையும் பட்டியலிட்டு, அவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.