தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் தடை செய்யபட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், சித்தேரிக்கரை பகுதியில் உள்ள சலாமத் நகரில், தன்னுடைய மனைவி சிவகாமி, மகள்கள் பிரியதர்ஷினி, யுவஸ்ரீ மற்றும் பாரதி ஆகியோருடன் வசித்து வந்தவர் அருண். நகைப் பட்டறை நடத்தி வரும் அருண் திருமணமாகி, சொந்தமாக வீடும் வாங்கியிருந்து இருக்கின்றார்.
அவர் தொழிலில் திடீரென்று நஷ்டம் ஏற்படவே, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றார். தொடர்ந்து தகாத நண்பர்களின் சகவாசத்தால், லாட்டரி பழக்கத்தினைப் பழகிக் கொண்டார். எப்படியாவது கடன் பிரச்சனையில் இருந்து வெளி வந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன், 3 லாட்டரிப் பழக்கத்தினைப் பழகிக் கொண்டார்.
ஒரு கட்டத்தில், குடிப்பழக்கத்தினைப் போல இந்த லாட்டரிப் பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டார். தொடர்ந்து கடன் சுமை அதிகரித்ததால், இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு வந்த அருண், நகையினைப் பாலீஸ் செய்யப் பயன்படுத்தும் சையனைடை எடுத்து தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் தந்துள்ளார். பின்னர், தன்னுடைய மனைவிக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல், அதனை வீடியோவும் எடுத்து அதனை வாட்ஸ் ஆப்பில் ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து, பதறியடித்து வந்த உறவினர்கள் அந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அந்த ஐந்து பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து பேசியுள்ள விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி ஜெயக்குமார், இதுவரை ஆன்லைன் லாட்டரித் தொடர்பாக சுமார் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், ஆன்லைனில் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் கூறியுள்ளார். அதே போல், இதற்குத் துணை போகும் போலீசாரும் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.