இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவியுள்ளது என, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சீனாவினைச் சேர்ந்த, கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்து வருகின்ற நிலையில், உலக நாடுகள் அனைத்தும், தற்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சீனாவில் உள்ள ஊஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்துள்ளார். அங்கு, நிலைமை மோசமானதும் அங்கிருந்து இந்தியாவிற்குத் திரும்பியுள்ளார். இதனிடையே, அவரை விமானநிலையத்தில் சோதனை செய்த அதிகாரிகள், மேற்கொண்டு சோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்து அவரை தனிமைப்படுத்தி உள்ளனர்.
அவருக்கான சிறப்பு சிகிச்சைகள் தற்பொழுது வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்க, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இளைஞருக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து 24 மணிநேரமும் மருத்துவர் கண்காணிப்பில், அந்த இளைஞர் உள்ளார்.