தமிழகத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை வெளியில் அனாவசியமாக நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. தமிழகப் போக்குவரத்துக் கழகமும், 90% வாகனங்களை இயக்கவில்லை.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இந்த நிலை நீடிக்கின்றது. தமிழகத்தில், காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிவதால், அவைகளை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மாலை ஆறு மணிக்கு மேல் டீ கடைகள் சென்னையில் இருக்கக் கூடாது எனவும், அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மார்ச் மாத இறுதியில் தொடங்க இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் தொடங்க இருந்த பள்ளி மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வானது, ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில், முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகப் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.