குட்கா முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் டிஜிபி திரு. ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் குட்காவின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, சென்னையில் உள்ள பல கிடங்குகளில், டன் கணக்கில் குட்காவினைப் பறிமுதல் செய்தனர்.
இந்த புகாரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், டிஜிபி ராஜேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என, திமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கதுறையினரும், சிபிஐ அதிகாரிகளும் அதிரடியாக விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, தற்பொழுது வரும் டிசம்பர் 2ம் தேதி அன்று, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராக, அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.