நேற்று ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆலையில் இருந்து விஷ வாயு தாக்கி, 11 பேர் மரணமடைந்தனர். அங்கு மீண்டும் விஷ வாயு கசிய ஆரம்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே-17ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். நேற்று அதிகாலை 3.15 மணியளவில், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி நிறுவனத்தின் பாலிமர் தொழிற்சாலையில் இருந்து, ஸ்டிரைன் வாயுவானது கசிந்தது.
இதனால், 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த விஷவாயு காற்றில் கலந்ததால், அந்த தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருந்த, பொதுமக்களை போலீசார் அவசர அவசரமாக வெளியேற்றினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அப்பகுதி மக்கள், மயக்கம், வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். அவர்களில், 1000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தற்பொழுது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை நலம் விசாரித்தார். உயிரிழந்தவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார். மத்திய அரசும் இது குறித்து உதவி செய்து வருகின்றது. இந்நிலையில், இன்று காலையில் அந்த ஆலையில் இருந்து மீண்டும் விஷவாயு கசிய ஆரம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.